கலாச்சார ஒருங்கிணைப்பாளரின் செய்தி - பே.கணேசமூர்த்தி   

 

கிறைச்சேச் வாழ் தமிழ்ப்பெருங்குடி மக்களிடையே இன்று ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக விளங்குவது கன்ரபரி தமிழ்ச் சங்கம் என்று கூறினால் அது மிகையாகாது. இச்சங்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று ஆல் போல் தழைத்துத் தனது பத்தாவது ஆண்டைப் பூர்த்தி செய்து நிற்பதையிட்டு எம்மக்கள் அனைவரும் பெருமிதம் அடைகிறார்கள் என்பதை நான்கூறி நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

 

கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் இச்சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளை எம்மவர்கள் பலர் காலத்துக்குக் காலம் மிகவும் சாதுரியமாகத் திறம்பட நடாத்தி வந்துள்ளனர் என்பது இங்கு   குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தமிழ் மொழியிலும் கலாச்சாரத்திலும் மிகவும் ஈடுபாடுள்ள காரணத்தினால் என்னுடையதும், என் குடும்பத்தினதும் பங்கை 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை ஆற்றத் தவறவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இத்தமிழ்ச் சங்கம் வழமைபோல் ஒவ்வொரு வருடமும் இத்தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில் சங்கத்தின் பத்தாவது ஆண்டும் பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்தர்பத்தில் நான் சங்கத்தின் கலாச்சார ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் காலகட்டத்திலே எமது தமிழ் மக்களினதும், அவர்களது பிள்ளைகளினதும் திறமைகளை எமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற நாட்டியம், நாடகம், இன்னிசை போன்றவற்றின் மூலம் எம்மை மகிழ்வித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மாதிரியான பல நிகழ்ச்சிகள் சங்கத்தின் வரலாற்றில் என்றென்றும் நடைபெற சங்க உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ். வளர்க எம் சங்கம்.