இலங்கையும் ஈழமும் - பே.கணேசமூர்த்தி

 

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஈழத்துத் தமிழர்கள் இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கும் சோகம்மிக்க வரலாற்றுப் பாதையில் குறிப்பாக தமிழ் மக்களின் கல்வியிலும்; கலாச்சாரத்திலும் எனது அனுபரீதியான உண்மைகள் சிலவற்றை நான் இங்கு இரத்தினச் சுருக்கமாகச் சமர்ப்பிக்கின்றேன்.

 

இன்று இந்தப் பூமியில் இருக்கின்ற அத்தனை மனிதநேயங்களுக்கும் தெரியும் இலங்கையில் எமது ஈழத்துத் தமிழ் மக்கள் சிங்கள இனவாதப் பேரரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பது. இது இற்றைக்கு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்ற ஒரு விடயமாகும். இந்த இயல்பற்ற நிலையிலும் ஈழத்தில் எம்மக்கள் எமது அழிக்கமுடியாத சொத்தான கல்வியைத் தங்களது பிள்ளைகளுக்கு கொடுக்கத் தவறவில்லை என்பதை எண்ணும்போது மிகவும் மகிழ்சியாக உள்ளது. காலம் காலமாக எம்தமிழ் மாணவர்களது கல்விநிலை மிகவும் உயர்வாகவே இருந்து வருகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதனாலோ என்னவோ இலங்கை அரசாங்கம் விகிதாசாரம் என்கின்ற தரப்படுத்தல் முறைத் திட்டத்தைக் அறிமுகப்படுத்தி ஈழத்தமிழர்களின் கல்வி உரிமையைச் சிறிது சிறிதாகப் பறித்தெடுக்கிறார்கள். இது இவ்வுலகில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த  ஒரு விடயமாகும்.

 

இவ்வாறாக ஈழத்தமிழ் மக்களின் அசைக்கமுடியாத சொத்தான கல்வியை அவர்கள் தமது விருப்பப்படி கற்பதற்கு மறைமுகமான தடையைச் சிறிது சிறிதாக அமுல்படுத்தாதிருந்தால் இன்று அனைத்து தமிழ் மக்களினது செம்மையான உண்மையான அறிவாற்றல்களையும் மதிநுட்பங்களையும் அவற்றின் பலாபலன்கள் ஈழத்திலும் அதை அண்டிய இலங்கையிலும் பிரயோகித்து ஒரு சுபீட்சமான நாட்டைக் கட்டி எழுப்பக்கூடியதாக இருந்திருக்கும் என்பதை இந்தச் சிங்கள இனவாதிகள் என்றுமே அறியத்தவறிவிட்டார்கள். இது அவர்களது அறியாமையை உலகிற்கு இன்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக தமிழ் மக்கள் பல மொழிகளைக் கற்றறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து இருக்கின்ற சமூகத்தினரில் பெரும்பான்மையினர் தங்களது மொழியை மட்டுமே கற்பது மாத்திரமல்லாது அதை ஈழத்தமிழ் மக்களிடையே திணிக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணராமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய தொன்றாகும்.

 

நான் இலங்கையில் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில் அரசாங்கத்தில் பணியாற்றத் தொடங்கிய காலத்திற்கு முன்பில் இருந்து இற்றைவரை எமது தமிழ் இனம் பல இன்னல்களை அநுபவித்து வருவது மாத்திரமின்றி எம்மால் எம்மக்கள் சார்பாக எவ்வித சுயமான தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கமுடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம் என்று எண்ணும்போது எம் இதயம் தீயாக எரிகின்றது. இந்தப் பரிதாபகரமான நிலையை எதிர்த்துத் தமிழ் தலைவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடி உள்ளனர். ஆனால் இவற்றை அடியோடு மாற்றுவதற்காக இன்றைய எமது தலைவர்கள் அரும்பாடுபட்டு வருகின்றார்கள் என்று கூறினால் அது மிகையாகாது என்பது இன்று குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை தெரிந்த உண்மையாகும். இந்தச் சூழ்நிலையிலும் எம் இனத்தை மாற்றானுக்குக் காட்டிக் கொடுக்கிற ஒருசில சுயநலவாதிகள் எம்மத்தியில் மாற்றான் கைப்பொம்மைகளாக இருக்கிறார்கள் என்று எண்ணும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

 

இந்நிலையில் ஈழத்து மண்ணில் எமது சுய கவுரவத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றி தூய்மையான நல்வாழ்வை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கொடுக்கவேண்டும் என்கின்ற தூய நோக்கோடு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசோடு போர்தொடுத்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் இன்று எம்மத்தியில் இல்லாது போனாலும் அவர்களது ஈடு இணையற்ற எண்ணங்களும் கூரிய நோக்குகளும் இன்று சீரான பாதையில் மிகவும் உன்னதமான நிலையில் மிகவேகமாக முன்னேறிக்கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் மிகவும் பெருமிதம் அடைகிறான் என்பதை நான்கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று எம் தாயகத்தில் பல இன்னல்கள் மத்தியில் வாழ்கின்ற எம்தமிழ் மக்கள் மத்தியில் ஒருசில  தீய சக்திகள் தங்கள் நாசகார வேலைகளின் கைவரிசையை காண்பிக்கின்றதால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி எவ்வளவோ அல்லல் படுகின்றார்கள் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

அதேபோல இன்று வெளி நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம்தமிழ் மக்கள் மத்தியிலும் ஒருசில தீய சக்திகள் தங்களின் சுயநலன்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்துகின்ற சூட்சிகளினால் எம்தமிழ் சமுதாயம் பல்வேறு  பிரச்சனைகளுக்குள்ளாகி இரண்டு பட்டு அல்லல் படுவதை நாம் பார்க்க முடிகிறது. இத்தீய சக்திகளைக் கற்றோரும் மற்றோரும் அடையாளம் கணடுகொள்ளும்வரை மக்கள் மத்தியில் அமைதி இன்மையும் நிம்மதி அற்ற போக்கும் நீடிக்குமே தவிர ஒரு இயல்பான சுபீட்சமான வாழ்வை எதிர்பார்க்க முடியாது என்பது திண்ணம். இதுதவிர இத்தீயசக்திகள் கற்றவர்களோடு கற்றவர்கள்போல் இணைந்து செயல்படுவதைக் கற்றவர்கள் புரிந்துகொள்ளா விட்டால், கற்றவர்கள் மற்றவர்கள் மத்தியில் சுயமாக தலைநிமிர்ந்து நடக்கமுடியாத நிலை உருவாகலாம். இத்தகைய தீயசக்திகள் பண்போடு வாழ்கின்ற குடும்பங்கள் மீது நடத்துகின்ற ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்துவது எப்படி? இத்தீயசக்திகள் இன்று எம் தாயகத்திலும் சரி வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் நம்மவர்கள் மத்தியிலும் சரி ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் தங்களது நோக்கங்கள் ஈடேறும்வரை ஒட்டுண்ணிகள் போல் கெட்டியாக பிடித்து ஒருசிலரைப் பலவந்தமாக பகடைக் காய்களாகப் பாவிக்கின்றார்கள். இந்த அவல நிலை எம் சமுதாயத்தில் மாறவேண்டும்.

 

ஈழத்தில் ஏத்தனையோ தடைகள் முட்டுக்கட்டைகளுக்கிடையில் நமது பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து வாழ்ந்துவரும் எம்மக்கள் மத்தியில் சிங்கள அரசு தனது அரசியல் லாபத்தை மட்டுமே ஒரே நோக்காக் கொண்டு இராணுவக் காடையர்களைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு சம்பவமாகும். இன்று ஈழத்தில் எம் தாய்குலத்தின் கற்புக்கும் பாதுகாப்பிற்கும் பெரிதும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. இந்தத் துர்பாக்கிய நிலைப்பாடு இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை எம்மால் அறிந்து கொள்ளக்கூடிய பக்குவம் எமக்கு இல்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் பதினொரு ஆண்டு காலமாக அதிபராக இருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சி முடிவுற்று மகிந்த ராஜபக்ச என்னும் இன்னுமொரு பேரினவாதி ஆடசிப்பீடம் ஏறி இருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்றதொன்றாகும்.

 

இவ்வாறாக ஈழத்தில் நம்மவர்கள் சிங்கள அரசின் செயற்கையான பல இன்னல்களையும் அழிவுகளையும் சந்தித்துச் சலனப்பட்டடுக்கொண்டிருந்த வேளையில் இயற்கை அழிவான சுனாமி வந்து எம்மக்களைச் சின்னாபின்னப் படுத்தி ஓராண்டு காலம் பூர்த்தியாகி விட்டது என்பதை நாமெல்லோரும்  அறிவோம். இன்று ஈழத்திலும் சரி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலும் சரி கடந்த சுனாமிச் சோகத்திற்குப்பின் ஆடசிப்பீடம் ஏறி இருக்கும் மகிந்தராஜபக்ச நோர்வே நாட்டின் அரசு உதவியோடு நல்லெண்ணச் சமாதானப் பேச்சுவார்த்தையில் தூயமனதோடு ஈடுபடுபட்டு எம் இனத்துக்கு எல்லா வகையிலும் ஒரு விடியலைக் காண்பிப்பாரா?  அல்லது கடந்தகால மற்றைய சிங்களப் பேரினவாதத் தலைவர்களையும் மஞ்சட் காவி தரித்த துறவிகளையும் மட்டுமே பின்பற்றி ஈழத் தமிழர்களுக்கு முழங்கை காட்டுவாரா என்ற சந்தேகம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதை நாம் அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம். எம் தமிழ் இனம் பொறுமைக்கு இலக்கணம் படைத்தவர்கள் அல்லவா? ஆனால் பொறுத்த தமிழினம் பொங்கி எழுந்து பல இயற்கையான வளங்களோடு கல்வி வளமும் கலை வளமும் கொண்ட தமது ஈழத்திருநாட்டை வென்றெடுக்கும் காலம் மிகத்தூரத்தில் இல்லை என்பதை ஆட்சிப்பீடம் ஏறி இருக்கும் இனவாதிகள் அறிவார்களா என்படு சந்தேகமே.