வாயில் மூங்கில்
புதர்
வரவேற்கும் வேம்பின்
நிழல்
மைதானப் புளிய
மரம்
கட்டிடங்களின் கம்பீரம்
கண்களின் திரையில்
இதோ தெரிகிறது!
உறவுகளின் அருமைகள்
பிரிவுகளில் புலப்படும்!
உணருகின்றோம்!
உயிர்வாழும் காலம்தாண்டி………
உயிரின் இறுதிப்பொறி
அணைகின்ற வேளையிலும்
நினைப்பிருக்கும்!
மூக்கிற்கு கீழே
அரும்புகள்
முளைவிடுகையிலும் ……
காந்தக் குரலில்
ஒரு
கம்பீரம் வருகையிலும்…..
எம்மை ஏந்தி
நின்று
உச்சிமோந்தது
எங்கள் கல்லூரி!
மேசைகளில் தாளம்போட்டு,
எகிறிக் குதிக்க
வைக்கும்
உற்சாக கானம்
போட்டு,
மீசை முறுக்கிவிட்டு,
மல்லுக்கட்டி சண்டையிட்டு,
மீண்டும் ஒன்றாக
உட்கார்ந்து உணவருந்தி
ஓயாத சந்தோஷம்
ஒன்றாக உறவாட……….
தேயாத நிலவுகளாய்த்
திரிந்தது ஒரு
காலம்!
வெளியுலகில்
எங்கள் திறமைகள்
மிதிக்கப்படுகையில்……
எம்மை மீறி
வந்த
கண்ணீர் துளிகள்
இதயக் கைக்குட்டையில்
பத்திரமாகவே இருக்கும்!
எங்கள் முதுகுகளுக்கு
குறிவைக்கப்பட்ட
அநீதி அம்புகளை
தகர்த்தெறிந்து
கிளர்ந்தெழுந்து
வெற்றிக்கேடயங்களை
கைப்பற்றும் போது
கத்திக் குதூகலித்த
குரலெல்லாம் கேட்கிறது
மைதானத்தின் புல்லிடமும்
நாங்கள்
நலம்
விசாரித்திருக்கிறோம்!
உயர்ந்த எல்லை
மதில்களை
“ஏன்
கட்டையாய்
இல்லை”
என்று உதைத்திருக்கிறோம்!
ஒருத்தனின் சாப்பாட்டை
ஒன்பதுபேர் சேர்ந்து
கருத்தாக உண்ட
அந்த காட்சிகள்
தெரிகிறது!
ஓ……. அந்தக்காலம்!
உலகின் வரண்ட
பூமிகளில்
குடிநீர் கிடைக்காமல்….
துவண்ட நாட்களிலும்
தண்ணீர் எறிந்து
விளையாடிய
அந்த இனிய
காலங்களின்
குளிர்மை குளிர்விக்கும்!
எங்கள் வாழ்வின்
வசந்த காலம்
- இந்தக்
கல்லூரிக் காலமாகவே
இருக்கலாம்!
இருந்தால்……
கோடைகாலத் துன்பத்திலும்
நினைவினில் பொங்குகின்ற
வசந்த கால
ஊற்றுக்களில்
நின்று நனைந்து
கொள்வோம்!
ஒன்று முடிகிறது!
ஒன்று தொடங்குகிறது!
ஆதித்தன் இங்கு
அஸ்தமித்தால்
வேறெங்கோ உதித்திருப்பான்!
தோழர்களே…..!
பிரிகின்றோம்! – ஆனாலும்
பிறளாத உணர்வுகளால்
பிணைந்திருப்போம்!
போகின்றோம்…..!
அளவில்லா ஏக்கத்துடனும்,
குளமான கண்களுடனும்,
திரும்பிப் பார்க்கிறோம்!
– எங்கள்
கல்லூரியின்
கம்பீரம்
புலப்படுகின்றது!
வாயில் மூங்கில்
புதர்
வரவேற்கும் வேம்பின்
நிழல்
மைதானப் புளிய
மரம்
கட்டிடங்களின் கம்பீரம்
கண்களின் திரையில்
இன்னும் தெரிகிறது!!
நீலப்பொன் கொடியின்
கீழ்,
நிர்மலமான ஓர்
அமைதியாய்,
எங்கள் கல்லூரி
நினைவுகள்
கடைசி மட்டும்
எங்களுடனேயே இருக்கும்!
அன்புடன்……பார்த்தா
பார்த்திபன்
: யாழ்ப்பாணத்தை
பிறப்பிடமாகவும்
கல்முனையை
வசிப்பிடமாகவும்
கொண்ட விவசாய விஞ்ஞான பட்டதாரியான
பார்த்தா
என்னும் பார்த்திபன்
தற்போது கிழக்கிலங்கைப்
பல்கலைக்கழகத்தில்
விரிவுரையாளராக
உள்ளார்.